Home108 திவ்ய தேசம்ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் , திருமணம் நிச்சயமாகும் அதி அற்புத திவ்ய...

ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் , திருமணம் நிச்சயமாகும் அதி அற்புத திவ்ய தேசம்-அழகிய மணவாளர் திருக்கோயில்

அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்

திவ்ய தேசம் 2

மூலவர் :அழகிய மணவாளர்

உற்சவர்:-

அம்மன் / தாயார்: கமலவல்லி

தல விருட்சம்:கமலபுஷ்கரிணி

தீர்த்தம்: –

ஆகமம் / பூஜை :பாஞ்சராத்ரம்

பழமை :1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் :திருக்கோழி

ஊர்: உறையூர்

மாவட்டம்: திருச்சி

மாநிலம் : தமிழ்நாடு

மங்களாசாசனம்

கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர்
குன்றமன்ன பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர்
தம்மையும் கண்டறியோம் வாழியரோ விவர் வண்ண
மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழியொன்று ஏந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர்
அழகியவா

-திருமங்கையாழ்வார்

திருவிழா

நவராத்திரி , கார்த்திகையில் திருப்பாணாழ்வார் திருவிழா 10 நாள்.

தல சிறப்பு

திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர் இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர் , கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர்.

பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இதிலிருந்து மாறுபட்டு தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில் திருச்சி அருகேயுள்ள உறையூரில் மட்டுமே நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசியன்று இங்கு சொர்க்கவாசல் திறப்பதில்லை வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். மாசி மாத தேய்பிறை ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தாயார் மட்டுமே வாசலைக் கடந்துவருவார். இங்கே பகவானுக்குரிய எல்லா வழிபாடுகளும் இந்த கமலவல்லித் தாயாருக்கு நடக்கிறது.

மாசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுவதை இங்கு கண்டு மகிழலாம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய தேசம்.

அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்
அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்

பொது தகவல்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.பிரகாரத்தில் நம்மாழ்வார் , ராமானுஜருக்கு சன்னதிகள் உள்ளன.மூலவரின் விமானம் கமலவிமானம் எனப்படுகிறது.கோயில் கோபுரம் 5 நிலை உடையது.

பிரார்த்தனை

முற்பிறவியின் தோஷம் காரணமாக திருமணம் நடக்காமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், திருமணமாகி, சூழ்நிலையால் பிரிந்து வாழ்பவர்களுக்கும், இளம் வயதிலேயே தோல் நோயால் துன்பப்படுகிறவர்களுக்கும் அழகிய குழந்தை அறிவுள்ள குழந்தை பிறக்க வேண்டும் என்பவர்களுக்கும் அனுக்கிரகம் கிடைக்கும் ஒரே கோயில் இந்த அழகிய மணாளப் பெருமாள் கோயில்தான். குறிப்பாக புதன் சனியன்று இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு அடுத்த பிறவி என்பது இருக்காது என்று நம்பப்படுகிறது.

நேர்த்திக்கடன்

தாயாருக்கு திருமஞ்சனம் செய்வித்து , நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம் .

தலபெருமை

மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும் கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டால் இங்கு சுவாமி தாயார் இருவரும் அவரை பார்த்தப்படி வடக்கு திசை நோக்கியிருக்கின்றனர் . திருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் , திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை .

இத்தலம் தாயாரின் பிறந்த தலம் என்பதால் , இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள் .இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது.மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள் . பெருமாள் உற்சவர் இல்லை.

பொதுவாக பெருமாள் தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர் ஆனால் , இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். இவளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது.

பங்குனி திருவிழா

ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். கமலவல்லி பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம்.

எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா ( ஆறாம் நாள் விழா ) நடக்கிறது.அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம் காவிரி , குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார்.அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி , வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.

கோயிலுக்கு வரும் சுவாமி , மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார் . பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார்.அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்குசென்று சுவாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார்.

பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு திரும்ப சுவாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார்.பங்குனி உத்திரத்தன்று இவர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார்.இவ்வாறு பங்குனி விழாவில் சுவாமி இரண்டு தாயார்களுடன்சேர்ந்து காட்சி தருவதை தரிசிப்பது விசேஷம்.

அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்
அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்

தல வரலாறு

ரங்கநாதரின் பக்தனான நங்க சோழ மன்னன் . இப்பகுதியை ஆண்டு வந்தான் அவனுக்கு புத்திரப்பேறு இல்லை ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார்.

ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது , ஒரு தடாகத்தில் தாமரை மலரில் , ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான்.மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து , ” கமலவல்லி ‘ ( கமலம் – தாமரை ) என பெயரிட்டு வளர்த்தான் . பருவமடைந்ததும் , தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள் . அப்போது , ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார்.அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண்டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள் . நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள் , தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாக கூறினார் . எனவே நந்தசோழன் , கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார் . அங்கு ரங்கநாதருடன் , கமலவல்லி ஐக்கியமானாள்.பின்பு மன்னன் , உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.

திறக்கும் நேரம்

காலை 6மணி முதல் 12மணி வரை.மாலை 5மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில், உறையூர்-620 003,திருச்சி மாவட்டம்,

தொலைபேசி எண்கள்: +91-431-2762 446,9443188716

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!