Homeபெருமாள் ஆலயங்கள்காரமடை நரசிங்கபெருமாள்:கடன் நிவர்த்தி தரும் ஆலயம்

காரமடை நரசிங்கபெருமாள்:கடன் நிவர்த்தி தரும் ஆலயம்

காரமடை நரசிங்கபெருமாள்

வீரபாண்டி ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள்லட்சுமி நரசிங்கப் பெருமாளைக் கண்ணாரத் தரிசிச்சு வேண்டிக்கிட்டா போதும்… நம்ம கவலையெல்லாம் பறந்தோடிடும்‘’ என்கின்றனர் பக்தர்கள்.

கோவை- காரமடையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது வீரபாண்டி பிரிவு ரோடு. இங்கே, அழகுறக் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்தில் சென்று வீரபாண்டி பிரிவில் இறங்கி, சிறிது தூரம் நடந்தால் கோயிலை அடையலாம்.

ஒருகாலத்தில், இந்தப் பகுதி முழுவதும் வனமாகத் திகழ்ந்ததாம். அப்போது பூமியில் இருந்து சுயம்புவாகத் தோன்றியவராம் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள். பிறகு, அந்த விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் மக்கள்.

பிற்காலத்தில் அந்நியர் படையெடுப்பின்போது, ஸ்வாமியின் விக்கிரகத்தைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, அதை எடுத்து அருகில் உள்ள கிணறு ஒன்றில் போட்டுவிட்டார்கள். கால ஓட்டத்தில் இந்த விஷயம் எவருக்குமே தெரியாமல் போய்விட்டது. இந்த நிலையில், ஊர்ப்பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், ‘கிணற்றுக்குள் இருக்கும் என்னை எடுத்துப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், இந்த ஊரே செழிக்கும்’ என்று அருள்புரிந்தாராம். அதன்படி கிணற்றில் இருந்த ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாளின் விக்கிரகத் திருமேனியை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து, அவருக்குக் கோயில் எழுப்பி, வழிபடத் துவங்கினார்கள் ஊர்மக்கள்.

Shri Lakshmi Narashinga Perumal Temple

அன்று துவங்கி இன்று வரை, காரமடையைச் சுற்றியுள்ள மொத்த கிராமங்களையும் கிராமத்து மக்களையும் காத்தருளி வருகிறார் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள்.

மூலவர் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அருகில் பிரகலாதனும் காட்சி தருவது ஆலயத்தின் சிறப்பு! ஒரே கல்லால் ஆன கொடிமரம், பன்னிரு ஆழ்வார்களின் சந்நிதி, ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஅனுமன், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீயோக நரசிம்மர் ஆகியோரும் சந்நிதி கொண்டிருக்கும் அற்புதமான கோயில் இது.

பொதுவாக, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீநரசிம்மர் வழிபாடு அமர்க்களப்படும். அந்த நாட்களில் மட்டுமின்றி, செவ்வாய்க்கிழமைதோறும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை தாமரைப் பூவால் அர்ச்சித்து வழிபட்டால், சகல சந்தானங்களும் பெறலாம்; எதிரிகள் தொல்லை ஒழியும்; எடுத்த காரியம் இனிதே வெற்றி பெறும் என்பது ஐதீகம்.

ஆனி மாதம் சித்திரை நட்சத்திர நாளில் பெருமாளுக்குக் கலசாபிஷேகமும், வெள்ளி ரதத்தில் வீதியுலாவும் விமரிசையாக நடைபெறும். அதேபோல், புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று, இங்கு நடைபெறும் நாட்டிய நாடகம் வெகு பிரசித்தம். அன்று இரவு முழுவதும் பஜனைப் பாடல்கள் பாடி வழிபடுவார்கள் பக்தர்கள்.

நவராத்திரியில் பெருமாளுக்குச் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறுகின்றன. நவராத்திரி கொலு வைபவமும், அப்போது சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா வருவதும் கொள்ளை அழகு!

ஐந்து, ஏழு, பதினொன்று அல்லது 16 சனிக்கிழமைகள், இங்கு தொடர்ந்து வந்து பெருமாளுக்கு விளக்கேற்றி, 16 முறை சந்நிதியை வலம் வந்து ஸ்வாமியை வழிபடுவது விசேஷம். இதனால், கடன் தொல்லை ஒழியும். விவசாயம் செழித்தோங்கும். வியாபாரம் லாபம் தரும்!

இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றும் கார்த்திகை மாதத்தில்… ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாளை விளக்கேற்றி வழிபடுங்கள். வளங்களும் நலங்களும் கூடும்!

Google Map :

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular