கிரக வக்கிரம்
நவ கிரகங்கள் சூரியனை மையமாக வைத்து வலதுபுறமாக முன்னோக்கி சுற்றி வருகின்றன. இது அக்கிரகங்களின் சகஜமான நிலையாகும். சில சமயங்களில் தன் நிலையிலிருந்து மாறி பின்னோக்கி சுற்றுகின்றன இந்த நிலையை வக்கிர நிலை என்கிறோம்.
நவகிரகங்களில் ராகு, கேது இரண்டும் எப்பொழுதுமே பின்னோக்கி சுற்றுவதால் அதற்கு தனியாக வக்கிர நிலை கிடையாது.
சூரியன் சந்திரன் இரண்டும் ஒளிக் கிரகங்கள் இருப்பதால் இவர்களுக்கு வக்கிர நிலை கிடையாது.
பஞ்சபூதக் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் இந்த ஐந்து கிரகங்களுக்கு மட்டும்தான் வக்கிர நிலை உண்டு.
இந்த 5 கிரகங்களும் குரு, சனி, செவ்வாய் ஆகிய மூன்றுக்கும் ஒருவிதமாகவும், புதன், சுக்கிரன் ஆகிய இருவருக்கும் ஒரு விதமாகவும் வக்கிரம் ஏற்படுகிறது.
குரு வக்கிரம், சனி வக்கிரம்
குருவும் சனியும் சூரியனிடமிருந்து 120 பாகை விலகிச் செல்லும் பொழுது வக்கிரம் ஆரம்பமாகிறது. 270 பாகை வரும்பொழுது வக்கிரம் நிவர்த்தியாகிறது. நட்சத்திர கணக்கில் பார்த்தால் 9 நட்சத்திரங்கள் இடைவெளி இருக்கும் போது வக்கிரம் ஆரம்பமாகும். அடுத்து 18 நட்சத்திரங்கள் இடைவெளியில் உள்ள போது வக்கிர நிவர்த்தி ஆகிவிடும்.
ராசிச் சக்கரத்தில் சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து 5வது வீட்டில் வக்கிரம் ஆரம்பம் 6,7,8 வீட்டில் உறுதியான வக்கிரம், 9வது வீட்டில் வக்கிர நிவர்த்தி.
எனவே குருவும், சனியும் சூரியனிடமிருந்து 5,9 ஆம் இடங்களில் இருக்கும் போது வக்கிரம் இருந்தாலும் இல்லாமலும் போகலாம். ஆனால் 6ஆம் இடத்தில் இருக்கும் பொழுது உறுதியான வக்கிர நிலை, 7ம் இடத்தில் இருக்கும்போது அதி வக்கிர நிலை 8ம் இடத்தில் இருக்கும்போது வக்கிரம் இறங்கும் நிலை, இது எந்தவித கணக்கீடுகளும் இல்லாமல் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் கூறிவிடலாம்.
செவ்வாய் வக்கிர நிலை
செவ்வாய் சூரியன் இருக்கும் வீட்டிற்கு 6வது ராசியில் வரும்பொழுது வக்கிரம் அடையும். 8வது ராசியில் வந்ததும் வக்கிர நிவர்த்தி ஆகி விடும்.
புதனும் சுக்கிரனும் இந்த அமைப்பில் வக்கிர நிலை ஏற்பட முடியாது. சூரியன் புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கோள்களுமே முக்கூட்டு கிரகம். எனவே சூரியனை விட்டு புதன் 28 பாகைக்கு மேலும் சுக்கிரன் 49 பாகைக்கு மேலும் போகமுடியாது. இந்த அமைப்பு இயற்கையாகவே அமைந்து விட்டதால் மேற்சொன்ன ஆறு ராசிகள் வித்தியாசம் இங்கு பொருந்தாது, வாய்ப்பும் இல்லை. இந்த கிரகங்களின் வக்கிர நிலை வேறு விதமானது.
புதன் வக்கிரம், அஸ்தமனம்
நவகிரகங்களில் சூரியனை வேகமாக சுற்றி வரும் கிரகம் புதன். பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வருவதற்குள் புதன் சூரியனை நான்கு முறை சுற்றி வந்துவிடுகிறது. சூரியனைச் சுற்றி வரும் புதன் நான்குவித நிலைகளை அடைகிறது.
அவை
1.சகஜ நிலை
2.மகாஅஸ்தமனம்
3.வக்கிரம்
4.வக்கிரஅஸ்தமனம்
மகா அஸ்தமனம்:
புதன் சூரியனை அதன் சுற்றுவட்டப்பாதையில் வழக்கமாக சுற்றிக்கொண்டிருக்கிறது. அப்படி சுற்றி வரும் போது சில சமயம் பூமியை விட்டு விலகி வெகுதூரம் சென்று சூரியனின் மறு பக்கத்தை அடைகிறது. அதாவது பூமிக்கும் புதனுக்கும் இடையே சூரியன் நிற்கும் நிலை ஏற்படுகிறது. புதனை விட சூரியன் பல மடங்கு பெரியதாக இருப்பதால் பூமியிலுள்ள நாம் பார்வைக்கு புதன் தெரியாமல் முழுவதும் மறைக்கப்படுகிறது.புதனை பார்க்கமுடியாமல் முழுவதும் மறைக்கப்படும் இந்த நிலைதான் “மகா அஸ்தமனம்” எனப்படுகிறது.
மகா அஸ்தமன பலன்கள்!
இவ்வாறு புதன் மகா அஸ்தமனம் அடைகிற காலத்தில் புதனுடைய கதிர்கள் நேரடியாக பூமியிலுள்ள நம்மை வந்தடைவது இல்லை. எனவே புதனின் மகா அஸ்தமன காலத்தில் பிறந்த குழந்தையின் வாழ்க்கையில் புதனின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். உதாரணமாக குழந்தையின் பேச்சுத் திறன், கல்வித் திறன் பாதிக்கப்படலாம். அறிவு வளர்ச்சியிலும் தாமதத்தை ஏற்படுத்தலாம்.
வக்கிர அஸ்தமனம்
புதன் சூரியனை சுற்றி வரும் போது சில சமயம் பூமிக்கு மிக அருகில் வந்து விடும் இத்தகைய காலத்தில் புதன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும். பூமியும் சூரியனைச் சுற்றி வருகிறது புதனும் சூரியனை சுற்றி வருகிறது ஆனால் பூமியின் வேகமும் புதனின் வேகமும் வித்தியாசமானவை எனவே இந்த வேக வித்தியாசத்தால் புதன் வக்கிரகதியில் பின்நோக்கி (இயற்கைக்கு மாறாக மறு திசையில் திரும்பி) வருவது போல் தோன்றுகிறது. இவ்வாறு புதன் வக்கிரகதியில் சஞ்சரிப்பது போல் தோன்றும் காலகட்டத்தில் கிட்டத்தட்ட சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் புதன் சஞ்சரிக்கும் நிலை ஏற்படும். இந்த நிலையில் புதனின் ஒருபக்கம் சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்கும்
இன்னொரு பக்கம் பூமியைப் பார்த்துக் கொண்டிருக்கும். சூரியனைப் பார்த்து திரும்பியுள்ள புதனின் பக்கம் வெளிச்சம் உள்ளதாக இருக்கும். பூமியை பார்த்து திரும்பியுள்ள புதனின் மறுபக்கம் இருட்டு உள்ளதாக இருக்கும். அதாவது பூமியில் உள்ள நமக்கு புதன் புலப்படுவதில்லை. கண் எதிரே புதன் இருந்தும் காண முடியாமல் போவதற்கு காரணம் நாம் காணும் புதனின் பக்கம் சூரிய வெளிச்சத்தை பெறுவதில்லை இந்த நிலையைத்தான் வக்கிர அஸ்தமனம் என்கிறோம்.
வக்கிர அஸ்தமன பலன்கள்
வக்கிர அஸ்தமனத்தில் பிறக்கும் குழந்தைக்கு புதனுடைய கதிர்கள் நேரடியாக அதிகமாக கிடைக்கின்றன எனவே குழந்தைகளை அதிக புத்திக் கூர்மை உள்ளதாக காணப்படுகிறது. இதைத்தான் ‘மறைந்த புதன் நிறைந்த கலை’ என்று சொல்லுகிறோம். இங்கு மறைந்த புதன் என்பது வக்கிராஸ்தமன மடைந்த புதனை குறிக்குமேயொழிய மகா அஸ்தமன மடைந்த புதனை குறிக்காது
ஆனால் புதன் வக்கிரகதியிலோ ,வக்கிராஸ்தமன நிலையிலோ பிறக்கின்ற குழந்தை அதிக புத்தி கூர்மை உடையதாக இருந்தாலும் சில சமயங்களில் குதர்க்கமான நிலையில்(சட்ட விரோதம், தீவிரவாதம்) புத்தி கூர்மையுள்ள குழந்தையாக இருந்து விடுகிறது. அதிக புத்தி கூர்மைக்கு காரணம் புதன் வக்கிரகதியில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவது தான். குதர்க்கமான குணம் இருப்பதற்கு காரணம் இயற்கையான சகஜ நிலையில் சஞ்சரிக்காமல் வக்ர கதியில் சஞ்சரிப்பதுதான்.
வக்கிர நிலை !
வக்கிர அஸ்தமன நிலைக்கு முன்பாக பூமியும் புதனும் சூரியனை சுற்றும் போது ஏற்படும் வேக வித்தியாசத்தால் புதன் பின்னோக்கி வருவது போல் தோன்றும் இதைத்தான் ‘வக்கிர நிலை’ என்கிறோம். இந்த வக்கிர காலத்தில் பிறந்த குழந்தைகளும் நல்ல அறிவுள்ளவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.
சகஜநிலை
புதன் மகா அஸ்தமனம், வக்கிரஅஸ்தமனம், வக்கிரம் அடையாத காலத்தில் புதனின் அளவான கதிர்கள் பூமியை நோக்கி வந்தடைகின்றன. இந்த நிலையை சகஜ நிலை என்கிறோம். இந்த காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் அறிவாற்றல் அளவுக்கு சரியானதாக இருக்கும்.
இவ்வாறு புதனின் கதிர்கள்
1.சகஜ நிலை
2.மகா அஸ்தமன நிலை
3.வக்கிர நிலை
4.வக்கிர அஸ்தமன நிலை
ஆகிய 4 நிலைகளில் நம்மை வந்தடைகின்றன.
எனவே ஒரு குழந்தை பிறக்கும் காலத்தில் புதன் இந்த நான்கு வித நிலைகளில் எத்தகைய நிலைகளில் இருந்து இருக்கிறான். அதனால் குழந்தையின் வாழ்க்கையில் புதன் காரகத்துவம் எவ்வாறு பாதிப்பான பலனளிக்கிறது என்பவைகளை நாம் ஆராய வேண்டும்.