Homeஆன்மிக தகவல்மகா சிவராத்திரி 2025: சிவ வழிபாடு மற்றும் விரதமுறைகள்

மகா சிவராத்திரி 2025: சிவ வழிபாடு மற்றும் விரதமுறைகள்

சிவராத்திரி

மாசி மாதம் 11-வது மாதம். 11 வது ராசியான கும்ப ராசியில் சூரியன் நுழையும் மாதம் மாசி மாதம். இதை “விஷ்ணுபதி புண்ணிய காலம்” என்று சொல்வார்கள். இந்த மாதத்தில் சூரியன், சந்திரன் எதிரெதிர் ராசியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதும் இரண்டு முக்கியமான விரத தினங்களாக இருக்கும். சூரியன் கும்பத்திலும், சந்திரன் சிம்மத்திலும்(மகம் நட்சத்திரத்தில்) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பௌர்ணமி “மாசி மகம்” என்று கொண்டாடப்படுகிறது. அதே சந்திரன் கும்ப ராசியில் சூரியனோடு இணையும் அமாவாசை நிகழ்வின் முதல் நாள் அதாவது 14 வது திதி ‘மகா சிவராத்திரி’ தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை 14ம் நாள் மாத சிவராத்திரி என்று அனுஷ்டிக்கிறார்கள். மாசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை 14 ஆம் நாளான சதுர்த்தசி திதியை மகா சிவராத்திரி நாளாக அனுஷ்டிக்கிறார்கள்.

மகா சிவராத்திரி 2025

இந்த ஆண்டு ‘மகா சிவராத்திரி’ பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. காலையில் திருவோண நட்சத்திரம் இருக்கின்றது.மாலை 5 மணி அளவில் அவிட்ட நட்சத்திரம் வந்துவிடுகிறது. அதைப்போலவே காலை 10 மணி வரை திரையோதசி திதியும், அதன் பிறகு சதுர்த்தசி திதியும் வந்து விடுகிறது. பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு மகா சிவராத்திரி தினமாக எல்லா சிவாலயங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

சிவராத்திரி என்றால் என்ன ?

சிவராத்திரி என்றால் சிவனுக்குரிய ராத்திரி அல்லது சிவனை வழிபட வேண்டிய ராத்திரி என்று எடுத்துக் கொள்ளலாம். அஞ்ஞானமாகிய இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு ஆன்மாக்களை அழைத்து செல்லும் அற்புத நாள்தான் ‘சிவராத்திரி’. இரவெல்லாம் விரதமிருந்து விடியும் போது சூரியன் என்கின்ற ஒளியை தரிசிக்கின்றோம். சிவராத்திரியில் விரதம் இருந்து சிவபெருமானாகிய மகா ஒளியை தரிசிக்கின்றோம். அந்த ஒளி நம் மனதின் குழப்பத்தையும் இருட்டையும் பாவங்களையும் துன்பங்களையும் விரட்டுகிறது. அதனால் தான் மகா சிவராத்திரி இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகிறது.

தீமையை அழிப்பவரும் வாழ்க்கையை மாற்றுபவருமான சிவபெருமானை வழிபடுவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. சிவராத்திரி பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வரும் பால்குண மாதத்தின் தேய்பிறை 14 ஆவது இரவில் கொண்டாடப்படுகிறது. இந்த இரவில் சிவபக்தர்கள் விழித்திருந்து சிவநாமத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்து அவரது அருளை பெற பற்பல வழிபாட்டுச் சடங்குகளை செய்கிறார்கள்.

சிவராத்திரிக்கான வரலாறு 

ஒரு முறை பார்வதி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்தினால் உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய,சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டதால் எங்கும் இருள் சூழ்ந்தது. உடனே சிவன் நெற்றிக்கண்ணை திறக்க வெப்பம் தாளாமல் தேவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். பார்வதி அன்று இரவு விழித்திருந்து அபிஷேகம் செய்து அவரை குளிரச் செய்தால் அதுவே சிவராத்திரி ஆகும்

சாகா வரம் தரும் அமிர்தத்தை வேண்டி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்தனர். வாசுகி பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்த போது பாம்பு வலி தாங்காமல் விஷத்தைக் கக்கியது. அதை திரட்டி விழுங்கிய சிவன் மயக்கம் வந்தது போல கிடந்து திருவிளையாடல் புரிந்தார். அன்று இரவில் நான்கு ஜாமங்களிலும் தேவர்கள் அவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர் அந்த நாளே சிவராத்திரி

விரத முறை

சிவராத்திரி அன்று நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. முடியாதவர்கள் காலை இரவில் பால், பழம் சாப்பிட்டு மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம்.

“ஓம் நமசிவாய”

“ஓம் சிவாய நம”

மந்திரங்களை முடிந்த அளவு ஜபிக்க வேண்டும்.

சிவன் கோயிலில் மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். பசி தூக்கத்தை அடக்குவதன் மூலம் காமம், கோபம் போன்ற தீய குணங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். சிவனுக்கு அபிஷேகம் செய்து புற வழிபாடு அக வழிபாடாக சிவபெருமானே தண்ணீர் பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது அதனை ஞான பாலாக்கி தந்தருள்வாயாக அறியாமல் செய்த பாவங்களைப் போக்கி நலம் சேர்ப்பாயாக என்று பிராத்திக்க வேண்டும்

சிவராத்திரி என்று நடந்தவை

  • படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.
  • சிவ பூஜை செய்த மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகன் வளம் பெற்றனர்.
  • தேவலோகத்தின் அதிபதியானார் இந்திரன்.
  • செல்வத்தின் அதிபதியானார் குபேரன்.
  • சிவனின் இடப்பாகத்தை பெற்றால் பார்வதி.
  • தவமிருந்து அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்தை பெற்றார்.
  • சிவனுக்கு தன் கண்களை கண்ணப்பர் அளித்தார்.
  • தவ சக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.
  • மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்தார் சிவபெருமான்.
  • பிரம்மாவும் மகாவிஷ்ணு சிவபெருமானின் திருமுடி திருவடியை தேடினர்.

 மோட்சம் தரும் வில்வம்

வில்வ மரத்தில் மகாலட்சுமி குடி கொண்டிருக்கிறாள். வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்ய மோட்சம் கிடைக்கும். ஒருமுறை பயன்படுத்திய வில்வத்தை நீரில் கழுவி விட்டு மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை வில்வ தளம் என்பர். இதனால் பூஜிப்பது சிறப்பானது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வில்வ இலைகளை பறிக்கக் கூடாது காய்ச்சல் இருமலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. 

சிவராத்திரி சிவராத்திரி அன்று ஏன் உபவாசம் இருக்க வேண்டும்

உபவாசம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். உபவாசம் என்பது உப+வாசம் என்று பிரியும். இறைவனுக்கு அருகில் செல்வது உண்ணாநோன்பு அனேகமாக அனைத்து சமய நூல்களும் உண்ணாநோன்பை வலியுறுத்துகின்றன.

உண்ணா நோன்பு என்பது உயிருக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் நன்மை செய்கின்றது. உடலில் உள்ள நச்சுப் பொருள்களை எல்லாம் உண்ணாநம்பும் வெளியேறுகின்றது. விரத நாளில் உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல கெட்ட எண்ணங்களை எண்ணாமல் இருப்பதே உபவாசம் என்று “பவிஷய புராணம் சொல்கிறது.

 சிவராத்திரியின் நோக்கம்

ஒருவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவனுக்கு வேண்டிய குணங்கள் பொறுமை, மவுனம், அகிம்சை, சத்தியம், தயை, தானம், தூய்மை புலனடக்கம். அக விழிப்புணர்வை தூண்டும் இந்த குணங்களை அடையச் செய்வதை சிவராத்திரியின் நோக்கமாகும்.

சிவராத்திரி பூஜை செய்வது

முதல் ஜாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் : சோமாஸ் கந்தர்

அபிஷேகம் : பஞ்சகவ்யம்

அலங்காரம் : வில்வம்

அர்ச்சனை : தாமரை ,அலரி

நிவேதனம் : பால் அன்னம் ,சக்கரை பொங்கல்

பழம்: வில்வம்

பட்டு : செம்பட்டு

தோத்திரம் : ரிக் வேதம் ,சிவபுராணம்

மணம் : பச்சை கற்பூரம், தேர்ந்த சந்தனம்

புகை : சாம்பிராணி ,சந்தனகட்டை

ஒளி : புட்பதீபம்

இரண்டாம் ஜாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் : தக்ஷிணாமூர்த்தி

அபிஷேகம் : பஞ்சாமிர்தம்

அலங்காரம் : குருந்தை

அர்ச்சனை : துளசி

நிவேதனம் : பாயாசம்,சக்கரை பொங்கல்

பழம்: பலா

பட்டு : மஞ்சள்பட்டு

தோத்திரம் : யஜுர் வேதம் ,கீர்த்தி திருவகவல்

மணம் :அகில்,சந்தனம்

புகை : சாம்பிராணி,குங்குமம்

ஒளி :நட்சத்திர தீபம்

மூன்றாம் ஜாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் :இலிங் கோற்பவர்

அபிஷேகம் : தேன்,பாலோதகம்

அலங்காரம் : கிளுவை,விலா

அர்ச்சனை :மூன்று இதழ் வில்வம் ,சாதி மலர்

நிவேதனம் : எள் அன்னம்

பழம்: மாதுளம்

பட்டு : வெண்பட்டு

தோத்திரம் :சாம வேதம்,திருவண்டபகுதி

மணம் : கஸ்தூரி சேர்ந்த சந்தனம்

புகை : மேகம்,கருங் குங்கிலியம்

ஒளி : ஐந்துமுக தீபம்

நான்காம் ஜாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் :சந்திர சேகரர் (இடபரூபர்)

அபிஷேகம் : கருப்பஞ்சாறு,வாசனை நீர்

அலங்காரம் :கரு நொச்சி

அர்ச்சனை :நந்தியாவட்டை

நிவேதனம் : வெண்சாதம்

பழம்: நானாவித பழங்கள்

பட்டு : நீலப்பட்டு

தோத்திரம் :அதர்வண வேதம் ,போற்றி திருவகவல்

மணம் : புனுகு சேர்ந்த சந்தனம்

புகை :கற்பூரம்,இலவங்கம்

ஒளி : மூன்று முக தீபம்

இறைவனின் பெயர்களை 16 முறை சொல்லி பூஜிப்பது ஷோடச பூஜை, 108 முறை சொல்லி பூஜை செய்வது அஸ்டோத்திரம், 300 முறை இறைவனின் நாமங்களை சொல்லி பூசிப்பது திரிசதி,1000 முறை சொல்லி பூஜிப்பது சகஸ்ர நாமா அர்ச்சனை. ஒரு லட்சம் முறை சொல்லி பூஜிப்பது லட்சர்ச்சனை ஒரு கோடி முறை சொல்லி பூஜையை செய்வது கோடி அர்ச்சனை.

சிவ நாமத்தை ஒரு கோடி முறை சொல்வதன் மூலமாக பிறவிப் பிணி அகன்று பிறவா பேரின்ப நிலை பிறக்கும். பஞ்சபூதங்கள் என்பது மண், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று இது வெளியிலும் இருக்கிறது உள்ளிலும் இருக்கிறது. ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. ஒன்று இல்லாமல் ஒன்று இருப்பதில்லை. ஒன்று குறைந்தாலும் உயிருக்கு பயனில்லை.

இந்த தத்துவங்களை பஞ்சபூத தத்துவங்களாக பஞ்சபூத தலங்களாக விளங்குகின்றன. இந்த பஞ்சபூதங்களும் ஈஸ்வர தத்துவமாக ஒடுங்கி சிவராத்திரியில் லயமாகி விழிப்புணர்வு பெறுகிறது. இறப்பு என்னும் மாய வலையிலிருந்து விடுபட்டு மெய்ப்பொருளாகிய செம்பொருள் எனும் இறைநிலையை அடையச் செய்வது சிவராத்திரி.

 சிவராத்திரி வழிபாடு

ஒவ்வொரு நாளும் சராசரியாக உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். 4 லட்சம் புதிய உயிர்கள் பிறக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்வு 74 வருடங்கள் என்று சொல்கிறார்கள். தினசரி பிறப்பையும் இறப்பையும் கண்ணால் காண்கின்றான். பிறப்பை காண முடியாத நிலையில் பிறந்த மனிதன் தன்னுடைய இறப்பையும் காணமுடிவதில்லை. நிச்சயமற்ற தன்மையில் வாழுகின்ற இந்த மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு இறப்பின் நுட்பங்களை உணரச் செய்து பேரின்ப நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்ற வழிபாடு தான் சிவராத்திரி வழிபாடு.

இருட்டில் தொடங்கிய வழிபாடு விடியலில் முடிகிறது. நான்கு சாம வழிபாட்டினால் நம்மைச் சுற்றி இருக்கின்ற பொய்மை ஆகிய இருள் விலகி உண்மையான வெளிச்சம் சிவந்த சுடராக அண்ணாமலையின் உச்சியில் தெரிகின்ற தீபமாக ஒளி பிழம்பாக நான்காவது ஜாமத்தின் முடிவில் நமக்கு காட்சி தருகின்ற “பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா” என்று இந்த காட்சியை சந்திரசேகர சொரூபத்தை காட்டுவது தான் சிவராத்திரியுடைய நிறைவு பகுதி.

நாளைய விடியல் நமக்கென்று இருக்கும் என்ற நம்பிக்கைதான் சிவராத்திரி. நாம் இதுவரை செய்த பாவங்களையும் பொறாமைகளையும் தொலைத்து தலைமுழுகி விட்டு சிவராத்திரி அன்று இன்று புதிதாய் பிறந்தோம் இது ஈசன் அளித்த வாழ்வு நம் கையில் இருப்பதும் நம் உடம்பால் சுகிப்பதும் அவன் தந்தது என்ற உணர்ந்து பிறருக்கு கொடுத்து மகிழ்ந்த பேரின்ப நிலையை அடைவது சிவராத்திரியின் நோக்கம்.

சிவராத்திரியில் என்ன செய்ய வேண்டும்

 சிவ சிந்தனை என்பது அன்பு சிந்தனை தான். மங்கல சிந்தனை தான. சிவராத்திரி என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால்

அப்பாநான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்

செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் ‘வேண்டும்

தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.

-என்றுதான் வேண்ட வேண்டும்.

சிவராத்திரியின்போது ஸ்ரீருத்ரம் போன்ற வேத மந்திரத்தைச் சொல்லி

வழிபட வேண்டும்.

நமஸ்தே (அ)ஸ்து பகவான் விஸ்வேஸ்வ ராய

மஹாதேவாய த்ரியம்பகாய, திரிபுராந்த காய

திரிகாக்னி காலாய காலாக்கினி ருத்ராய

நீலகண்டாய், மிருத்யுஞ்சனாய,

ஸர்வேஸ்வராய, மஹாதேவாய நமஹ

பகவானே! விஸ்வேஸ்வரன் என்று சொல்லப்படுகின்ற உலக நாயகனே! தேவர்களின் தலைவனே! மகாதேவனே! முப்புரங்களை எரித்தவளே முக்கண்ணனே குதானே விஷததை அரும் திய நீலகண்டனானவனே, காலனை வென்றவனே, அனைத்து உயிருக்கும் ஈசனே. மகாதேவனே உனக்கு நமஸ்காரம் என்று சொல்கின்ற இந்தப் பகுதியை சொல்ல வேண்டும்.

அடுத்து, குரு நமசிவாயர் அருளிய

ஓம் எனும் எழுத்தில் உள்ளே ஒளியதாய் விளங்குகின்ற வாமனே கருணை நல்கும்

அன்னலே நமசிவாய

-என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

சிவராத்திரி விரத பலன்

இந்த நாளில் சிவன் கோயிலுக்கு சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகற்றுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். முறைப்படி 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள். சிவராத்திரி அன்று நியம முறைப்படி விரதம் அனுஷ்டித்தால் வாக்கு பலிதமும்,மந்திர சித்தியும் கூடி வரும் என்பது சித்தர்கள் வாக்கு.

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கி போகும். கௌதமர், வசிஷ்டர், அகஸ்தியர் போன்ற சப்த ரிஷிகளும், சூரியன், சந்திர குபேரன், மன்மதன் விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரும் சிவராத்திரி விரதம் இருந்து பெயர் பெற்றதாக கூறப்படுகின்றது.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!