பொங்கல் வைக்க உகந்த நேரம் 2026
நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 30ஆம் தேதி 14.01.2026 புதன்கிழமை, தேய்பிறை ஏகாதசி திதி, அனுஷ நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் பகல் 03.07 மணிக்கு ரிஷப லக்னத்தில் சூரியன் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதனை முன்னிட்டு விசுவாசு வருடம் தை மாதம் 1ம் தேதி 15.01.2026 வியாழக்கிழமை, துவாதசி திதி, கேட்டை நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் சுக்கிரன், புதன் ஓரையில் அல்லது பகல் 1.00 மணிக்கு மேல் 1:30 மணிக்குள் குரு ஓரையில் அல்லது பிற்பகல்04.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் சுக்கிரன், புதன் ஓரையில் பொங்கல் வைப்பது உத்தமம்.
புது பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொடி கொத்தை எடுத்து கங்கணமாக தயாரித்து பானையை சுற்றி கட்டி, அவரவர் சம்பிரதாய முறைப்படி பொங்கல் வைக்கலாம். குலதெய்வத்தை வணங்கி பொங்கல் வைத்து, பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்” என்று மூன்று முறை கூவி சூரியனை வணங்குவது நல்லது.
கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்பு பூசணி, கிழங்கு வகை, மொச்சை, அவரை, பழவகைகள் வைத்து நிவேதனம் செய்து, புஷ்பத்தை எடுத்து தூவி வணங்கி பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கு பொங்கலை வாழை இலையில் வைத்து உண்ண வைப்பது, பிறகு நம்முடைய மூதாதையர்களை நினைத்து காகத்துக்கு பொங்கல் வைப்பது உத்தமம்.
மாட்டுப் பொங்கல்
மறுநாள் 16.01.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் சுக்கிரன், புதன் ஓரையில் பகல் 01.00 மணிக்கு மேல் 03.00 மணிக்குள் சுக்கிரன், புதன் ஓரையில் அல்லது பகல் 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் குரு ஓரையில் கோ பூஜை செய்து வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றுக்கு உண்ண கொடுப்பது நல்லது.
காணும் பொங்கல்
மறுநாள் காணும் பொங்கலாகும். இன்றைய நாள் முழுவதும் உற்றார் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உறவாடி உற்சாகமாக பொழுதுகளை கழிக்கலாம். மற்றவர்களுக்கு பொங்கல் இனாம் கொடுப்பது, பரிசு பொருட்கள் கொடுப்பது மூலம் நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கலாம்.















