பங்குனி மாத ராசி பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

பங்குனி மாத ராசி பலன்கள் -2023

பங்குனி மாத ராசி பலன்கள்

மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

சுக்கிரன், செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக இம்மாதம் முழுவதும் நிலைகொண்டுள்ளனர். பங்குனி 15ம் தேதியிலிருந்து (29-03-2023) சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய கும்பத்திற்கு மாறுவது மிக நல்ல கிரக சஞ்சார மாறுதலாகும். குரு பகவான் அனுகூலமற்ற நிலையில் சஞ்சரிக்கும் இத்தருணத்தில்,சுக்கிரன் உங்கள் பக்கம் நிற்பது, பணப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்கு உதவுகிறது.

வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். வீண் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். திருமண முயற்சிகளில் சிறு,சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும், மாத இறுதியில், நல்ல வரன் அமையும்.

பலன் தரும் பரிகாரம்

ராகுவை, சனிக் கிரகமாகக் கருதிச் செய்ய வேண்டும் என பூர்வ ஜோதிட கிரந்தங்கள் கூறுகின்றன. ஆதலால், திருநள்ளாறு அல்லது திருக்கொள்ளிக்காடு சனி பகவானின் தரிசனம் நல்ல பலனைத் தரும். செல்லும்போது, தவறாமல் எள் எண்ணெய் தீபங்கள் ஐந்து ஏற்றி வைக்கவும்.

அனுகூல தினங்கள்

பங்குனி:1,2,6-9, 13-16, 20-23, 27, 28.

சந்திராஷ்டம தினங்கள்

பங்குனி: 26 முதல் 28 பிற்பகல் வரை.

பங்குனி மாத ராசி பலன்கள்

ரிஷபம்
(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை

குரு, சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் அனுகூலமான நிலைகளில் இம்மாதம் முழுவதும் சஞ்சரிக்கின்றனர். இதுவரை உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமாகிய மகரத்தில் நிலைகொண்டிருந்த சனி பகவான், அவருடைய மற்றொரு வீடும், உங்கள் ராசிக்குத் தொழில் ஸ்தானமுமாகிய கும்ப ராசிக்கு மாறுகிறார். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். சுபச் செலவுகள் அதிகமாக இருப்பினும், பண வசதி நல்லபடி இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள்! விரயத்தில், ராகு இருப்பினும், ஆரோக்கியம் நல்லபடியே நீடிக்கும் இம்மாதம் முழுவதும்!!

பலன் தரும் பரிகாரம்

சனி மற்றும் ராகுவின் நிலைகளினால், அதிக உழைப்பும், வெளியூர்ப் பயணங்களும், அசதியும், உடலை வருத்தும். மனத்தில் சற்று விரக்தியும் ஏற்படக்கூடும். ஆதலால், பரிகாரம் இத்தகைய துன்பங்களை அடியோடு போக்கும். 24 சனிக்கிழமைகள் அருகிலுள்ள ஆலயம் ஒன்றில் எரியும் தீபத்தில் சிறிது எள்ளெண்ணெய் சேர்த்துவரலாம். காகத்திற்கு, சிறிது நெய், பருப்பு, கருப்பு எள் சேர்த்த ஐந்து சாத உருண்டைகளை தினமும் வைப்பது அற்புதமான பரிகாரமாகும்.

அனுகூல தினங்கள்

பங்குனி:3-8,13-15, 20-23,27

சந்திராஷ்டம தினங்கள்

பங்குனி:1,2.மீண்டும் பங்குனி 28 பிற்பகல் முதல் 30 வரை.

பங்குனி மாத ராசி பலன்கள்

மிதுனம்
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

கோள்சார விதிகளின்படி, இந்தப் பங்குனி மாதம் உங்களுக்கு பல யோக பலன்களை அளிக்க உள்ளது. பங்குனி 15ம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான தினமாகும்! கடந்த இரண்டரை வருடங்களாக அஷ்டமச் சனிநிலையினால், பலவிதத் துன்பங்களையும், உடல் உபாதைகளையும், பிரச்னைகளையும் சந்தித்து வந்த உங்களுக்கு, அந்தத் தோஷம் நீங்குகிறது.

பல குடும்பப் பிரச்னைகள் படிப்படியாக திர ஆரம்பிப்பதால், மனத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த “டென்ஷன்” மனநிலை நீங்கும். மனத்தில் அமைதி பிறக்கும். பூர்வ புண்ணிய ராசியில் கேது அமர்ந்திருப்பதால், தீர்த்த, தல யாத்திரை சென்று வருவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

லாப ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள சுக்கிரன் மற்றும் ராகுவினால், நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கு சுக்கிரனின் நிலை சுப பலம் பெற்றுள்ளது.

பலன் தரும் பரிகாரம்

தினமும் உங்கள் இஷ்ட தெய்வத்தையும், பித்ருக்களையும் (மறைந்த முன்னோர்கள்) மனத்தால் நினைத்து, பூஜித்துவந்தால் போதும். அளவற்ற நன்மைகள் உங்களைத் தேடிவரும்.

அனுகூல தினங்கள்:

பங்குனி:1,2,6,7, 11-15, 19-22, 26-28.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 3ம் தேதி முதல், 5 காலை வரை.

பங்குனி மாத ராசி பலன்கள்

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து, ராசியைப் பார்ப்பதால், பிரச்னைகளின் கடுமை குறையும். சனி பகவான், உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய கும்ப ராசிக்கு மாறுவது, அளவோடு சிரமங்களை ஏற்படுத்தும். பொதுவாக, சனியின் அஷ்டம ராசி சஞ்சார தோஷம் சற்றுக் கடுமையாகவே பாதிக்கும் என்பது ஜோதிடக் கலையின் பொது விதியாகும்.

ஆனால், உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியே சனி பகவானாக இருப்பதால், பாதிப்பு கடுமையாக இராது (ஆதாரம்:’பிருஹத் ஜாதகம் மற்றும் “பூர்வ பாராசர்யம்” ஆகிய மிகப் புராதன ஜோதிட நூல்கள்). ஆயினும், அலைச்சலும், குடும்ப சம்பந்தமான பிரச்னைகளினால், கவலையும், பண விரயமும் ஏற்படும்.

பலன் தரும் பரிகாரம்

மிகவும் அவசியம். தினமும் காலையில் ஸ்ரீகந்தர் சஷ்டிகவசமும், மாலையில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமமும் சொல்லி வந்தால் போதும். இரண்டுமே அளவற்ற மந்திர சக்தி பெற்றவை.

அனுகூல தினங்கள்:

பங்குனி:3,4,8-11, 16-18, 23-26, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 5 காலை முதல், 7 பிற்பகல் வரை.

பங்குனி மாத ராசி பலன்கள்

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

இதுவரையில், உங்களுக்குச் சாதகமாக சஞ்சரித்த சனி பகவான், அனுசுலமற்ற கும்ப ராசிக்கு மாறுவது, நன்மை தராது! சுக்கிரன் மற்றும் செவ்வாய், கேது ஆகியோர் சாதகமாக உள்ளனர். கும்ப ராசி, சிம்ம ராசியினருக்கு களத்திர ஸ்தானமாகும். அதாவது, மனைவியைக் குறிக்கும் ராசி. இத்தருணத்தில் குருவும் உதவிகரமாக இல்லை!! கணவர் மனைவியரிடையே கருத்துவேற்றுமை ஏற்பட்டு, குடும்ப அமைதி பாதிக்கப்படக்கூடும்.

மனைவியின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். வரவிற்கு மேல் செலவுகள் ஏற்படுவதால், பணப் பிரச்னையும் கவலையை அளிக்கும். சுக்கிரனும், செவ்வாயும் அனுகூலமாக நிலைகொண்டிருப்பதால், அவ்வப்போது நிதியுதவியும் எளிதில் கிடைக்கும்.

பலன் தரும் பரிகாரம்

24 சனிக்கிழமைகள் உங்கள் வீட்டுப் பூஜையறையில், மாலையில் மண் அகலில் ஐந்து எள் எண்ணெய் தீபங்கள் ஏற்றி வந்தால், அற்புதமான பலன்கள் கிடைக்கும். சனிக்கிழமை ஒன்றில் திருமலை-திருப்பதி சென்று, திருவேங்கடத்து இன்னமுதனை தரிசித்துவிட்டு வந்தாலும் போதும்.

அனுகூல தினங்கள்:

பங்குனி:4-6,10-12, 17-19, 23-25, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி:7 பிற்பகல் முதல், 9 மாலை வரை

பங்குனி மாத ராசி பலன்கள்

கன்னி

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குரு, சுக்கிரன் ஆகிய இருவரும் சேர்ந்து சுபபலம் பெற்று சஞ்சரிக்கும் நிலையில், சனி பகவானும் கும்ப ராசிக்கு மாறுவது சிறந்த யோக பலன்களை அளிக்கக்கூடிய கிரக அணியாகும். வருமானம் திருப்திகரமாக உள்ளது. குடும்பத்தில் வீண் செலவுகள் குறையும்.

குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மனத்திற்கு நிம்மதியை அளிக்கும். திருமண முயற்சிகள் எளிதில் கைகூடும். ராகுவின் அஷ்டம ஸ்தான சஞ்சார நிலையினால், அவ்வப்போது சிறு,சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.

பலன் தரும் பரிகாரம்

ஒருமுறை திருநாகேஸ்வரம் அல்லது காளஹஸ்தி சென்று தீபமேற்றி வைத்து தரிசித்துவிட்டு வந்தால், மிக நல்ல பலன் கிட்டும்.

அனுகூல தினங்கள்:

பங்குனி:1-3,6-8, 12-15, 20-22, 26-28.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 9 மாலை முதல், 11 இரவு வரை.

பங்குனி மாத ராசி பலன்கள்


துலாம்

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை )

சென்ற இரண்டரை வருடங்களாக,சனிபகவானின்அர்த்தாஷ்டம சஞ்சார நிலையினால், பல வகைகளிலும் பிரச்னைகளையே சந்தித்தும், மன நிம்மதியை இழந்தும் வருந்திய துலாம் ராசி அன்பர்களுக்கு, அந்தத் தோஷம் இப்போது அடியோடு விலகிவிட்டது.

ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தியைக் காணலாம். மனைவியின் உடல்நலனிலும் முன்னேற்றம் ஏற்படும். மன நிம்மதியை பாதித்துவந்த பல பிரச்னைகள் நல்லபடி நீங்குவதை அனுபவத்தில் பார்க்கலாம். கணவர் மனைவியரிடையே பரஸ்பர அந்தியோன்யம் நிலவும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் பெண் அல்லது பிள்ளையின் வரவு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

பலன் தரும் பரிகாரம்

தினமும் ஒரு ஸர்க்கமாவது ஸ்ரீமத் சுந்தர காண்டம் படித்துவருவது, நல்ல பலனையளிக்கும்.சுந்தர காண்டத்திற்கு, “சர்வ கிரக தோஷப் பரிகார ரத்னம்” என்ற பெருமையும் சர்வதோஷ நிவாரணி என்ற புகழும் உண்டு. கைமேல் பலன் கிட்டும்.

அனுகூல தினங்கள்:

பங்குனி:1,2,6-9. 14-17, 20-22. 26-28.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 11 இரவு முதல், 13 வரை.

பங்குனி மாத ராசி பலன்கள்

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை )

இதுவரை, உங்கள் ராசிக்கு நன்மை செய்யும் மகரத்தில் சஞ்சரித்த சனி பகவான், அர்த்தாஷ்டக தோஷத்தை விளைவிக்கும் கும்ப ராசிக்கு மாறுவது, நன்மை செய்யாது. ஆயினும், குருவும், ராகுவும் அனுகூலமாக உள்ளனர் இம்மாதம் முழுவதும் ! வரவும், செலவும் சமமாக இருக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்வார், சுப பலம் பெற்றுள்ள குரு பகவான்.

ராகுவின் சுப பலத்தினால், எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், கருத்துவேற்றுமைகள் மனத்தில் “டென்ஷனை” ஏற்படுத்தும். நண்பர்களுக்கு, உதவி செய்வதற்காக உத்தரவாத கையெழுத்து போடுவதையும், பிறரிடம் கடன் வாங்கிக் கொடுப்பதையும் தவிர்க்க கிரக நிலைகள் முன்னெச்சரிக்கை செய்கின்றன.

பலன் தரும் பரிகாரம்

தினந்தோறும் ஸ்ரீமகாலட்சுமியையும், ஸ்ரீஅம்பிகையையும் பூஜித்துவந்தால் போதும். எத்தகைய தோஷமானாலும், சூரியனைக் கண்ட பனிபோல் மறையும்.

அனுகூல தினங்கள்:

பங்குனி:2-4,9-12, 17-19, 23-26, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 14 முதல், 16 மாலை வரை.

பங்குனி மாத ராசி பலன்கள்

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

பங்குனி மாதம் 15ம் தேதியுடன் கடந்த ஏழரை வருடங்களாக உங்களை வருத்தி வந்த “ஏழரைச் சனிக் காலம்” நீங்கி, நல்ல காலம் உதயமாகிறது. ஜோதிடக் கலையின் கோள்சார விதிகளின்படி, ஏழரைச் சனிக் காலம் என்பது, கிரகணக் காலம் போன்றதாகும். சிலருக்கு, மிகக் கடினமான சோதனைகளும், பலருக்கு மிதமான துன்பங்களும் ஏற்படும். அவரவரது ஜாதகத்தின் பூர்வபுண்ணியராசியின் அடிப்படையில்தான் சனி பகவான் தனது ஏழரைக் கால அதிகாரத்தின்போது சிரமங்களை ஏற்படுத்துவார் என்பதையும் “பூர்வ பாராசர்யம்”, “காலப்ரகாஸிகா” ஆகிய புராதன ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன.

பலன் தரும் பரிகாரம்

தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தீபத்தில் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துவிட்டு தரிசித்து வரவும்.

அனுகூல தினங்கள்:

பங்குனி:1,4-8,12-15, 19-22, 27, 28.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 16 மாலை முதல், 18 வரை.

பங்குனி மாத ராசி பலன்கள்

மகரம்

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

ஏழரைச் சனியின் ஜென்மச் சனிக் காலம் முடிந்து, கடைசி பகுதி ஆரம்பமாகியுள்ள நிலையில், சூரியனும்,சுக்கிரனும், செவ்வாயும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றனர் இந்தப் பங்குனி மாதம் முழுவதும்! இதே தருணத்தில், உங்கள் ராசியின் களத்திர, பாக்கிய, லாப ஸ்தானங்களுக்கு, குருபகவானின் சுபப் பார்வையும் கிடைக்கிறது.

வருமானத்திற்குக் குறைவிராது. இதுவரை தொடர்ந்து ஏற்பட்டுவந்த அலைச்சலும், வெளியூர்ப்பயணங்களும் இனி இராது. வீண்செலவுகள்கட்டுக்கடங்கியே இருக்கும். திருமணச் செலவுகள் எதிர்பார்த்ததைவிடச் சற்று அதிகமாகவே இருக்கும். சுக்கிரனின் நிலையினால், உறவினர்களிடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும். நீதிமன்ற வழக்குகளில், நியாயம் கிடைக்கும்.

பலன் தரும் பரிகாரம்

மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பிராகாரத்திலுள்ள, சித்தர் சந்நதியில் வியாழக்கிழமைதோறும் நெய் தீபம் ஏற்றிவைத்து தரிசிப்பது கைமேல் பலனளிக்கும். இதற்கு வசதியற்றவர்கள், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் செய்யலாம். அதே பலன் கிட்டும்.

அனுகூல தினங்கள்

பங்குனி:1-3,6-9,13-16, 22-24, 27, 28.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி:19 முதல் 21 மாலை வரை.

பங்குனி மாத ராசி பலன்கள்

கும்பம்

(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம்,பூரட்டாதி 3ம் பாதம் வரை)

குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக சஞ்சரிக்கும் நிலையில், சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் பிரவேசிக்கிறார். கோள்சார விதிகளின்படி, இவர் சுமார் இரண்டரை வருட காலம் கும்ப ராசியில் சஞ்சரிக்க வேண்டும். கும்பம், சனியின் ஆட்சிவீடாக இருப்பதால், சிரமங்கள் மிகக் கடுமையாக இராது. தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அடிக்கடி ஏதாவதொரு ஆரோக்கியக் குறைவு ஏற்படுவதால், மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது.

திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கண்டச் சனி அதிகார காலத்தின்போது, திருமண முயற்சிகளில் தவறுகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு இருப்பதை காளிதாஸரின் ‘உத்திர காலாம்ருதம்” என்னும் ஜோதிட நூல் விளக்கியுள்ளது.சுபச் செலவுகள் அதிகளவிலேயே இருக்கும். கூடிய வரையில், வீண் அலைச்சல்களையும், கடின உழைப்பையும் தேவையற்ற கவலைகளையும் குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நெருங்கிய உறவினர்களின் மறைமுகத் தொல்லைகள் வேதனையைத் தரும்.

பலன் தரும் பரிகாரம்

தினமும், ஒரு தஸகம் ஸ்ரீமத் நாராயணீயம் படித்து, ஸ்ரீ குருவாயூரப்பனை பூஜித்துவந்தால் போதும். கண்டச்சனி தோஷத்திற்கு கண் கண்ட பரிகாரமிது.

அனுகூல தினங்கள்:

பங்குனி:1,2,6-9, 13-15, 19, 20, 24-26,30

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 21 மாலை முதல், 23 பின்னிரவு வரை.

பங்குனி மாத ராசி பலன்கள்

மீனம்

பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

மீனம் ராசி அன்பர்களுக்கு, ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. ஜென்ம ராசியில் குரு பகவான் அமர்ந்திருக்கின்றார். “ஜென்ம குரு வனத்திலே….!” என்றொரு மூதுரை நெடுங்காலமாக நம் நாட்டில் வழங்கிவருகிறது. அதாவது, ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும்போது, குடும்பத்தைவிட்டு, தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும் என்பதே பொருள்.

ஸ்ரீராமபிரான், 14 ஆண்டுகள் வனவாசத்திற்குச் சென்றபோது, அவரது ஜாதகப்படி, குரு பகவான் அவரது ஜென்ம ராசியில் நிலைகொண்டிருந்ததே இத்தகைய பழமொழி ஏற்பட்டதற்குக் காரணமாகும். குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்டு செலவு செய்வது மிகவும் அவசியம். சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் பூரண குணம் கிடைக்கும்.

பலன் தரும் பரிகாரம்

திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, காளஹஸ்தி, பூவரசன்குப்பம், அஹோபிலம், சிம்மாச்சலம் திருத்தல தரிசனம் மிகச் சிறந்த பரிகாரங்களாகும். ஸ்வாதி நட்சத்திரத் தினத்தன்று, உபவாசமிருப்பதும், கைமேல் பலனளிக்கும் அற்புதப் பரிகாரங்களாகும்.

அனுகூல தினங்கள்:

பங்குனி:1,2,6-9, 13-15, 19-22, 26, 27.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 25 வரை. 23 பின்னிரவு முதல்,

Related Post

Leave a Comment

error: Content is protected !!