Homeஜோதிட தொடர்மேஷ லக்னம்: செவ்வாய் தரும் யோக பலன்கள்

மேஷ லக்னம்: செவ்வாய் தரும் யோக பலன்கள்

மேஷ லக்னம்

மேஷ லக்னத்தில் பிறந்த உங்களின் லக்னத்திற்கு  அதிபதியே செவ்வாய்தான். அவரே உங்களின் மையமாக இருந்து ஆள்வார். உங்களின் ஊற்றுக்கண்ணும் அவரே ஆவார். அவரின் சக்தியை பெற்றுக் கொண்டே உங்களின் வாழ்வாதாரச் சக்கரமானது சுற்றிக் கொண்டிருக்கும்.

இப்போது லக்னாதிபதி தனித்து நின்றால் என்ற பலனென்று பார்ப்போமா?

லக்னாதிபதியான செவ்வாய் லக்னத்திலேயே அதாவது ஒன்றாம் இடத்திலிருந்தால் தோற்றத்தில் கம்பீரம் இருக்கும், என்ன நினைக்கிறார்களோ அதை உடனடியாக செயல்படுத்த துணிவார். வெட்டிப் பேச்சு இல்லாமல் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். 

இந்த செவ்வாயானது மிக சரியாக அஸ்வினி, பரணி, கிருத்திகை போன்ற நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால் அடிப்படை வசதிகள் நிறைந்த வீட்டில் பிறந்தவர்களாக இருப்பார்கள். அல்லது இவர்கள் பிறந்த பிறகு சகல வசதி வாய்ப்புகளும் பெருகும். ஒரு இயக்கத்திற்கு தலைமை தாங்கும் அளவிற்கு உயர்ந்திருப்பார்கள். 

எப்போதும் ஆளுமை பண்போடு இருப்பார்கள். பெண்களாக இருந்தால் ஆண்தன்மை கொஞ்சம் மிகுதியாக இருக்கும். அதற்குரிய தோரணையோடு இருப்பார்கள். தன்னுடைய எந்த உரிமையையும் எங்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். “எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்” என்று பேசுவார்கள். எனவே செவ்வாய் லக்னத்திலேயே அமர்ந்திருந்தால் தனக்குத்தானே சுயம்பாக வளர்ந்து வருவார்கள். செவ்வாய் இங்கு சுயம்பு யோகமாகவே இவர்களை பரிமளிக்கச் செய்யும். இது ஒரு நல்ல அமைப்பாகும். 

மற்ற கிரகங்கள் ஜாதகத்தில் எப்படி இருந்தாலும் செவ்வாய் நின்று நிதானித்து வீரியமாக செயல்பட்டு கொடுக்கவேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும்.

செவ்வாய்க்கு பொதுவாகவே புதனும் சனியும் பகைவர்கள். எனவே புதனின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரத்தில் அமரக்கூடாது உதாரணமாக; பூசம், ஆயில்யம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் அமராமல் இருப்பது நல்லது.

இரண்டாம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் அமர்வது நல்ல அம்சமாகும். சிறந்த மேடைப் பேச்சாளர்களாக வருவார்கள். வழக்கறிஞராக முயற்சித்தால் எளிதில் ஆகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் கண் மருத்துவத்தில் சிறந்து விளங்குவார்கள். இங்கேயோ இன்னொரு விஷயத்தையும் கவனித்து விடுவோம்.. 

மேஷ லக்னம்

இரண்டும் ஏழும் அதாவது ரிஷபமும் துலாமும் சுக்கிரனுடைய வீடுகள். இதில் ஏழில் செவ்வாய் நின்றால் பொண்டாட்டி தாசனாக இருப்பார்கள். லக்னாதிபதியான செவ்வாய் ஏழுக்குரிய களத்திர ஸ்தானத்தில் நிற்கும் போது தன்னைவிட மனைவிக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதே போல இவர்களைவிட மனைவியும் திறமை வாய்ந்தவராகவே இருப்பார். 

இங்கு இன்னொன்றவற்றையும் கவனிப்போம்.. 2,4,7,8,12ல் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும். ஆனால் மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதியே செவ்வாயாக இருப்பதால் தோஷத்தின் வீரியம் குறையும்.

மிதுனத்தில் மூன்றாம் இடத்தில் செவ்வாய் அமரும்போது காது தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும் எனவே காது வலி இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். எதையும் கிரகிக்கு சக்தி இயல்பிலேயே குறைந்திருக்கும். “உனக்கு எத்தனை தடவை ஒரு விஷயத்தை சொல்றது” என்று அவ்வப்போது ஏச்சு பேச்சுகள் வாங்கும் படியாக இருக்கும். 

அதே போல இவர்களுக்கு அடுத்ததாக வரும் வாரிசு சகோதரராக அல்லது சகோதரியாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு அல்லது இவரின் தாயின் இரு கரு கலைப்பிற்குப் பிறகு மூன்றாவது ஆக ஒரு ஜீவன் வந்திருக்கும் அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் பாதிக்கப்பட்ட சகோதரர்களாக இருப்பார்கள், அப்படி இல்லை எனில் வயது ஏற ஏற சகோதரரோடு எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாமலேயே இருக்கும். 

கடக்கத்தில் செவ்வாய் அமரும்போது கொஞ்சம் கவனிக்க வேண்டும். பூசம், ஆயில்ய நட்சத்திரத்தில் செவ்வாய் உட்கார கூடாது. நுரையீரல் தொடர்பான கோளாறு அல்லது வீசிங் பிரச்சனை வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். ஆணாக இருந்தால் உயிரணுக்கள் நீர்த்துப்போகும். பெண்ணாக இருந்தால் ரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் தொந்தரவு இருக்கும். தாயாரோடு அவ்வப்போது கருத்து மோதல் இருந்து கொண்டே இருக்கும். இளம் வயதிலேயே தாயாருக்கு கண்டங்கள் வந்து போயிருக்கும். அல்லது தாயை விட்டு பிரிந்து தாத்தா பாட்டியிடம் வளருவார்கள் வீட்டிற்கு ஏதாவது செலவு இருந்து கொண்டே இருக்கும்.

செவ்வாய் ஐந்தாம் வீடான(சிம்மம்) பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமரும்பொழுது சிறந்த மக்கட்பேறு கிட்டும். உறவினர்கள் புடை சூழ இருப்பார்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்படாமல் இருப்பார்கள். சகல சௌபாக்கியமும் கிட்டும்.

கன்னியில் அதாவது ஆறாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் நரம்பு தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எதிலுமே தொடக்கம் சிரமமாக இருக்கும். ஆபத்திற்கு யாரும் உதவ மாட்டார்கள். தானே எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டியதுதான். மேலும் ஆறாம் இடம் என்பது பொதுவாக மறைவு ஸ்தானமாகும். “சர லக்னத்திற்கு உரியவர் உபய லக்னத்தில் அமர்ந்தால்”? என்று ஜோதிட மொழி உண்டு. எனவே எதிலுமே ஸ்திர புத்தி இருக்கும். சரியோ தவறோ என்னோடு போகட்டும் என்று இருப்பார்கள். 

சிறிய வயதில் ஏற்படும் நட்பை கூட திருமணம் ஆகியும் தொடர்பவர்கள் அதிகம் உண்டு. மனைவி என்ன சொன்னாலும் ஒருமுறை அம்மா என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து நடப்பார்கள். இது பெண்களுக்கும் பொருந்தும்.

விருச்சகத்தில் செவ்வாய் இருந்தால் ஹெர்னியா, பைல்ஸ், தைராய்டு பிரச்சனைகள் இருக்கும். லக்னாதிபதியே எட்டாம் வீடான விருச்சகத்திற்கும் அதிபதியாக வருகிறார். லக்னாதிபதி எட்டாம் வீட்டில் மறைகிறார். நீங்கள் உழைப்பீர்கள். ஆனால் அதில் இன்னொருவர் பயன்பெறுவார். “அஸ்திவாரமா இருந்தது இவர் தான்” என்பார்கள். அதேபோல தன்னை நெறிப்படுத்த தவறிவிடுவார் வார்த்தைகளை இறைக்க கூடாது. அளவோடு பேச வேண்டும். எதிர்மறையான எண்ணங்கள், ஏட்டிக்கு போட்டியாக இருப்பது கூடாது. இன்னொருவரின் வளர்ச்சியை பார்த்து பெருமூச்சு விடக்கூடாது.காம வேகம் அதிகமாக இருக்கும். எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார்கள் ஆனால் அதை இங்கிதமாக வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் சபையிலே “பேச எழும்போதே உட்காருங்க சார்” என்று சொல்லிவிடுவார்கள்.எட்டில் செவ்வாய் இருந்தால் ஆயுள் கெட்டி. கற்பனையிலேயே மூழ்கி இருப்பார்கள். இது ஒரு விதமான நேர்மறையான சித்த பிரம்மை என்று சொல்லலாம். அதனால் சிலர் உழைக்காமலேயே இருந்து விடுவார்கள்.

தனுசு ராசியான ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையேயான ஏதோ ஒரு பனிப்போர் இருந்து கொண்டே இருக்கும். தந்தை பெரிய அளவில் இருந்தால் மகனால் உயர முடியாது. தந்தை கொஞ்சம் கீழேயிருந்தால் மகன் உயர்வார். சிலருக்கு தந்தையார் சம்பாதித்த சொத்துக்கள் ஒட்டாமலேயே போவதுண்டு.

இந்த லக்னாதிபதி செவ்வாயானவர் பத்தாம் வீடான மகரத்தில் உச்சம் அடைகிறார். எனவே செவ்வாய் மகரத்தில் அமர்ந்தால் அது யோகமாகும். ஒரு கிரகம் ராசியில் 28 டிகிரி முதல் 30 டிகிரி பாகைக்குள் வந்து விட்டாலே உச்சமடைந்து விடும். அதுபோல மகரத்திற்கு வந்துவிட்டால் சொத்து சேர்க்கை, தோப்பு, பங்களா, என்று ஏகபோகமான வாழ்க்கை அமையும். சிலர் அரசாங்கத்தில் வலிமையான பதவிகளை பெறுவார்கள். அமைச்சர் பதவி யோகமுண்டு. 

மேஷ லக்னம்

காவல்துறை, ராணுவம், வங்கியில் அதிகாரிகளாக ஆவார்கள். ஆனால் இவர்களின் நேர்மை வெளியுலகத்திற்கு சரிவராத நிலையின் போது விருப்ப ஓய்வில் வெளியேறுவார்கள். 

எலக்ட்ரிக்கல் ஷாப்,பாத்திர தொழிற்சாலை போன்றவற்றை தொடங்க முயற்சித்து வெற்றி அடைவார்கள். சிலர் பள்ளியில் வேலைக்கு சேர்ந்து NSS,NCC போன்ற பயிற்சிகளை கொடுப்பார்கள்.

கும்பம் 11ம் இடம் என்பது பாதகஸ்தானமாகும். இவ்வாறு பாதக ஸ்தானத்தில் அமரும்பொழுது மூத்த சகோதரரோடு பிரச்சனைகள் இருந்தபடியே இருக்கும். சிலருக்கு மூத்த சகோதரரே கூட இல்லாமல் இருக்கும். இவர்கள் தங்கள் பெயரில் நிலங்களை வைத்துக் கொள்வது நல்லதல்ல. கூட்டு குடும்பமும் கூடாது. நிழல் யுத்தம் நடந்து கொண்டே இருக்கும். அக்கம் பக்கத்தில் எங்கேயும் இருந்து பார்த்தபடியே இருப்பது நல்லது.

மீன ராசியில் உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால் ரத்த அழுத்த நோய் அவஸ்தைகுள்ளாக்கும். இது அயன சயன ஸ்தானமாக இருப்பதால் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். தனக்கு எதிராக யாரோ சதி செய்வது போன்ற பிரம்மையில் இருப்பார்கள். ஆனாலும் குருவினுடைய வீடான மீனத்தில் செவ்வாய் அமர்வது சில நன்மைகளை தந்தே தீரும்.

ஜாதகத்தில் செவ்வாய் இவ்வாறு தனித்து நிற்கும்போது ஏற்படக்கூடிய பாதிப்பை போக்கிக் கொள்வதற்கு கோயில்கள் நிச்சயம் உதவும். மேலும் ஏற்படக்கூடிய யோக பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் ஆலய தரிசனம் நன்மையை தரும். எனவே சென்னை மற்றும் மகாபலிபுரத்திற்கு அருகே உள்ள திருப்போரூர் முருகப் பெருமானை தரிசித்து வாருங்கள், அது மட்டுமல்லாது அங்குள்ள சிதம்பர சுவாமிகளின் ஜீவ சமாதி பீடத்திற்கு அருகே அமைதியாக அமர்ந்து விட்டு வாருங்கள். முருகன் செவ்வாயின் எதிர்மறையை நேர்மறையாக்குவார் செம்மையான வாழ்வை அருள்வார்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!