குரு பலம்
ஜோதிடத்தில் பலன் கூறுவதற்கு பல வழிமுறைகள் உள்ளன அவை கீழே தரப்பட்டுள்ளன
1.பராசரர் முறை
2.ஜெயிமினி முறை
3.தாஜக் முறை
4.பிருகு நாடி முறை
பராசர முறையில் பல உட்பிரிவுகள் உண்டு அப்பிரிவுகளுக்குள் ஒன்று அஷ்டவர்க்க முறையாகும். அதில் ராகு கேதுக்களைத் தவிர மற்ற ஏழு கிரகங்களும் ராசி சக்கரத்தில் அவை:
1.தான் என்ற ஸ்தானம்(1)
2.(தான் நின்ற ஸ்தானம் மற்றும் ராகு, கேதுக்கள் நின்ற ஸ்தானங்களைத் தவிர) பிற கோள்கள் நின்ற ஸ்தானம்(6)
3.லக்ன ஸ்தானம்(1)
ஆகிய எட்டு ஸ்தானங்களிலிருந்து கணக்கிட எந்தெந்த வீடுகளுக்கு தங்களுடைய பிந்துக்களை அல்லது பரல்களை தருவார்கள் என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் குருவானவர், சந்திரன் நின்ற (ஜென்ம ராசிக்கு) வீட்டிற்கு 2,5,7,9,11 ஆகிய ஐந்து இடங்களுக்கு தன்னுடைய பரல்களை தருவார் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒரு கிரகம் எந்தெந்த வீடுகளுக்கு தன்னுடைய பரல்களை தருகிறதோ அந்த வீடு அந்த கிரகத்திற்கு பலம் வாய்ந்த இடமாகும் இதன் அடிப்படையிலேயே கோச்சார பலன்கள் கணிக்கப்படுகின்றது. இதன்படி கோச்சார குரு ஜென்ம ராசிக்கு 2,5,7,9,11 இடங்களில் சஞ்சரிக்கும் போது குரு பலம் வாய்ந்தவராக இருப்பார்.
ஜோதிடத்தில் குருவானவர் தெய்வ அருளைக் குறிக்கும் கிரகமாகும். எனவே எந்த ஒரு செயலை செய்தாலும் அந்த செயலை குரு கோச்சாரத்தில் பலம் வாய்ந்த இடங்களில் சஞ்சரிக்கும் போது செய்தால் அந்த செயல் சுபமாக நடக்க தெய்வ அனுகிரகம் கிடைக்கும் என்னும் அடிப்படையில் தான் குருபலம் பார்க்கப்படுகிறது. ஆனால் குருபலம் வந்தால் திருமணம் நடக்கும் என்னும் தவறான நம்பிக்கை சமூகத்தில் இருக்கிறது.
ஒரு சுபகாரியம் நடக்கும்போது தெய்வ அனுகிரகம் வேண்டும் என்பதற்காகத்தான் குருபலம் பார்க்கப்படுகின்றதே தவிர குருபலம் வந்தால் அந்த சுபகாரியம் நடந்து விடும் என்பதற்காக குரு பலம் பார்க்கப்படுவதில்லை.
ஒருவருக்கு திருமணம் நடக்கும் போது கோச்சார குருவானவர் அவருடைய ஜென்ம ராசிக்கு 2,5,7,9, 11 இல் சஞ்சரித்தால் அந்த நபருக்கு தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் என்பது மட்டும்தான் உண்மை. குருபலம் வந்தால்தான் திருமணம் நடந்தது என்பதில் உண்மை இல்லை. எனவே குருபலம் வந்துவிட்டதால் திருமணம் நடக்கும் என்பது தவறான நம்பிக்கை ஆகும்.