சூரிய தசா புத்தி பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

சூரிய தசா புத்தி பலன்கள்

சூரிய தசா- சூரிய புக்தி

சூரிய தசாவில் சூரிய புத்தியின் காலங்கள் 3 மாதம் 18 நாட்கள் ஆகும்.

சூரிய தசாவின் சுயபுக்தி காலங்களில் ஜனன ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம், நட்பு மற்றும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால் அரசு மூலம் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளால் நேசிக்கப்படும் யோகம், மன நிம்மதி, ஆடை ஆபரண சேர்க்கை, தெய்வ தரிசனங்களுக்காக பயணம் செய்யும் அமைப்பு, திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, சிறப்பான புத்திர பாக்கியம், பூர்வீக சொத்துக்களால் அனுகூலம், தந்தையால் சாதகப் பலன்கள் மற்றும் கணக்கு, கம்ப்யூட்டர் கல்வியில் உயர்வு உண்டாகும். வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும்.

சூரியன் பலமிழந்திருந்தால் சொந்தங்களால் தொல்லை, பணக்கஷ்டம், கடன்களால் அவதி, வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளால் பாதிப்பு இருக்கும். இடத்தை விட்டே செல்ல வேண்டிய நிலை, ஜாதகரின் தந்தைக்கு கண்டம் உண்டாகும். தலைவலி, வயிற்றுவலி, இருதய நோய்கள், கண்களில் பாதிப்பு, காய்ச்சல், பயம், பகைவர்களின் தொல்லை அதிகரிக்க கூடிய நிலை ஏற்படும்.

சூரிய தசா- சந்திர புத்தி

சூரிய தசையில் சந்திர புக்தி காலங்கள் 6 மாதமாகும்.

சந்திரன் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோணத்தில் ஆட்சி உச்சம் பெற்றோ அமைந்திருந்து, சுபர் சேர்க்கை, சுபர் சாரம் பெற்று தசா நாதனுக்கு தசா நாதனுக்கு சாதகமாக இருந்தால் அனுகூலமான நற்பலன்களை பெற முடியும். திருமண சுப காரியங்கள் நடைபெற்று, புத்திர பாக்கியம் அமையும். பெண்களால் யோகம், தனலாபம் உண்டாகும். வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கை, தோப்பு, பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.

சந்திரன் பலவீனமாக இருந்து, நீசமாகி, பாவிகள் உடன் சம்பந்தமாகி, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று, தசா நாதனுக்கு 6, 8,12-ல் அமையப் பெற்றிருந்தால் மனதில் பயம், குழப்பம், விரோதம், பிரிவு, மரணபயம், சிறுநீரகப் பிரச்சனை, ஜலத்தால் கண்டம், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சோம்பல், தொழில் உத்தியோகத்தில் குழப்பம் போன்றவை உண்டாகும்.

சூரிய தசா புத்தி பலன்கள்

சூரிய தசா- செவ்வாய் புத்தி

சூரிய தசாவில் செவ்வாய் புத்தியானது 4 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.

செவ்வாய் லக்கினத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ 3,6,10,11-ல் அமையப் பெற்றால் பூமி, மனை சேர்க்கை, வண்டி வாகன சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை மற்றும் சகோதரர்களால் அனுகூலம், பகைவரை வெற்றி கொள்ளும் ஆற்றல், மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, வியாதிகள் குணமாகி செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகும்.

செவ்வாய் சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றோ, பகை, நீசம் பெற்றோ, வக்ரம் பெற்றோ, தசா நாதனுக்கு 8,12-ல் அமைந்து புத்தி நடைபெற்றாலும், பகைவர்களால் கலகம், வண்டி வாகனம் பழுது அடையும் நிலை, பூமி மனை போன்றவற்றால் வம்பு வழக்குகள் ஏற்படும் சூழ்நிலை, வெட்டுக் காயம் ஏற்படும் நிலை,காய்ச்சலால் உபாதை, திருடர் மற்றும் பகைவரால் பிரச்சனைஸ் நெருப்பினால் கண்டம், எடுத்த காரியம் தடைபடும் நிலை, அரசு வழியில் தண்டனை, தொழில் உத்தியோகத்தில் எதிர்நீச்சல் போடும் நிலை போன்ற கெடுபலன்கள் ஏற்படும்.

சூரிய தசா- ராகு புத்தி

சூரிய தசையில் ராகு புத்தியானது 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.

சூரியனுக்கு ராகு பகவான் பகை என்பதால் பொதுவாகவே பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும், ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று, சுபர் சேர்க்கை பெற்று, சுப கிரகங்களின் பார்வை பெற்று, சுப கிரகங்களின் சாரம் பெற்றிருந்தால் மட்டுமே நல்ல ஆரோக்கியமும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் உண்டாகும்.

ராகு லக்னத்திற்கு 8, 12-ல் அமையப் பெற்று, பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றிருந்தால் பகைவர்களால் பிரச்சினை, கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு, பண விரையம் ஏற்படக்கூடிய நிலை, விபத்தினால் கண்டம், அலர்ஜி பாதிப்பு, தேவையற்ற பழக்க வழக்கங்கள் உண்டாகக் கூடிய சூழ்நிலை, அரசு வழியில் பிரச்சனை, எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும். தேவையற்ற அவமானங்களையும் சந்திக்க நேரிடும்.

சூரிய தசா புத்தி பலன்கள்

சூரிய தசா- குரு புத்தி

சூரிய தசாவில் குரு புத்தியானது 9 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.

குரு பகவான் கேந்திர திரிகோணங்களில் ஆட்சி, உச்சம் பெற்று நட்பு சுபர் சேர்க்கை பெற்றிருந்தால், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு, சிறப்பான புத்திர பாக்கியம், பொருளாதார நிலையில் உயர்வு, சமுதாயத்தில் செல்வம் செல்வாக்கு பெயர் புகழ் உயரக் கூடிய யோகம், தெய்வீக சிந்தனை, தான தரும காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பு, பெரிய மனிதர்களின் தொடர்பு போன்ற அற்புதமான நற்பலன்கள் உண்டாகும்.

குரு பாவகிரகங்களின் சேர்க்கைப் பெற்றோ, நீசம் மற்றும் அஸ்தங்கம் பெற்றோ, வக்கிரம் பெற்றோ தசா நாதனுக்கு 6, 8,12-ல் அமையப் பெற்றோ இருந்தால், மனைவி பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, குடும்பத்தில் கலகம், தேவையற்ற அவமானங்கள், கொடுத்த பணத்தை வாங்க முடியாத நிலை, உற்றார் உறவினர்களிடம் பிரச்சனை, இடம் விட்டு இடம் சென்று அலையும் நிலை, அரசாங்கத்தால் பிரச்சினை, போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

சூரிய தசா-சனி புத்தி

சூரிய தசாவில் சனி புத்தியானது 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.

சனி ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களில் அமைந்திருந்தாலும் 3, 6, 10 ,11-ல் இருந்தாலும், தனக்கு நட்பு கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல், வேலையாட்களால் அனுகூலம், விவசாயத்தால் அதிக லாபம், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் அனுகூலம், ஆடை ஆபரண, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வு, எதிரிகளின் பலம் குறைந்து ஜாதகரின் பலம் கூட கூடிய வாய்ப்பு உண்டாகும். அசையா சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும்.

சனி பலமிழந்து பகை, நீசம், வக்ரம் பெற்று பாவிகளின் சேர்க்கை உடன் இருந்தால், உடல்நிலை பாதிப்புகள், மனதில் சஞ்சலம், நீசர்கள் உடன் சவகாசம், அரசு வழியில் பிரச்சினை, கடன் தொல்லை, நண்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே பகை, இடம் விட்டு இடம் பெயருதல், பங்காளிகளுடன் வம்பு வழக்குகளும் உண்டாகும். வாதம், எலும்பு சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும்.

சூரிய தசா- புதன் புத்தி

சூரிய தசாவில் புதன் புக்தியானது 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.

புதன் ஆட்சியோ, உச்சமோ பெற்று இருந்தாலும், சுபர் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தாலும், நல்ல தைரியம், துணிவு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், தெய்வ பக்தி, குருபக்தி, தாய் தந்தை மீது பக்தி, தொழில் வியாபாரத்தில் ஈடுபடும் உண்டாகும். அரசு வழியில் ஆதரவு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். கணிதம் கம்ப்யூட்டர் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொடுக்கும். ஆடை ஆபரணம் சேரும். பெண் குழந்தை யோகம் கிட்டும். பொருளாதாரம் உயரும்.

புதன் லக்னத்திற்கு 6, 8,12-ல் அமைந்தோ, பகை நீசம் பெற்றோ, வக்ரம் பெற்றோ பாவிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தால், மனநிலை பாதிப்பு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய், எதையும் சிந்திக்க முடியாத நிலை, ஞாபகசக்தி குறையும் நிலை ஏற்படும். தொழில் உத்தியோகத்தில் மந்தநிலை, தாய்மாமனுக்கு பிரச்சனை ஏற்படும். கடன்கள் அதிகரிக்கும். வீண் வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரிடும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

சூரிய தசா புத்தி பலன்கள்

சூரிய தசா-கேது புத்தி

சூரிய தசாவில் கேது புக்தியானது 4 மாதங்கள் 6 நாட்கள் நடைபெறும்.

கேது 3, 6,10, 11-ஆம் இடத்திலும், லக்னாதிபதி சேர்க்கை பெற்றிருந்தாலும், சுப கிரகங்களின் சேர்க்கை பார்வை பெற்று கேந்திர திரிகோணத்தில் இருந்தாலும், தெய்வபக்தி மிகுதியாகும். கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் புண்ணிய ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்பும், புகழும், உயரும். பகைவர்களை வெல்லும் அமைப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, கைவிட்டு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். புராண கதைகளை வாசிக்கும் யோகம் கிட்டும்.

கேது 8-ல் இருந்தாலும், பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றாலும், பணவிரயம், தந்தைக்கு கண்டம், தீர்மானிக்க முடியாத உடல் நிலை பாதிப்பு, தலையில் நோய், சிறுநீரகப் பிரச்சனை, மனைவி பிள்ளைகளுக்கு சோதனை, அரசாங்கத்தால் அவமானங்கள், தேவையற்ற குழப்பம் மற்றும் மனநிலை பாதிப்பு, விஷத்தால் கண்டம், வயிற்று வலி பிரச்சனை, வண்டி வாகனத்தால் வீண் செலவு, எதிர்பாராத விபத்து போன்றவை உண்டாகும்.

சூரிய தசா-சுக்கிர புத்தி

சூரிய தசையில் சுக்கிர புத்தி 12 மாதங்கள் நடைபெறும்.

சுக்கிரன் லக்னத்திற்கு கேந்திர திரிகோணத்தில் 2, 11-ல் ஆட்சி உச்சம் நட்பு பெற்று சுபர் வீடுகளில் அமையப் பெற்றால் அரசாங்க வழியில் அனுகூலம், வண்டி வாகன சேர்க்கை, ஆடை ஆபரண மற்றும் அசையா சொத்துக்களின் சேர்க்கை, சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, பெண் குழந்தை யோகம், குடும்பத்தில் பூரிப்பு, ஒற்றுமை, உடல் ஆரோக்கியத்தில் மேன்மை, நல்ல கட்டில் சுகம், சுகபோக ஆடம்பரமான வாழ்க்கை அமையும், பெண்களால் முன்னேற்றம் உண்டாகும்.

சுக்கிரன் பலமிழந்து இருந்து லக்னத்திற்கு 6 ,8 ,12ல் மறைந்து பகை, நீசம், வக்ரம் பெற்று பாவிகளின் சேர்க்கையுடன் இருந்தால், சர்க்கரை வியாதி, மர்ம உறுப்புகளில் நோய்கள், கணவன் மனைவியிடையே இல்லற வாழ்வில் பிரச்சனை, எதிலும் திருப்தியற்ற நிலை, திருமண சுப காரியம் நடைபெற தடை, மன நிம்மதி குறைவு, வண்டி வாகனங்கள் பழுது படுதல், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சுகபோக சொகுசு வாழ்விற்கு தடை உண்டாகும்.

சூரியனை வழிபடும் முறை- பரிகாரங்கள்:

ஞாயிற்றுக்கிழமைகளில் வெல்லம் கோதுமை போன்றவற்றை தானம் செய்தல், உபவாசம் இருத்தல், சூரியனின் அதிதேவதையான சிவனை வணங்குதல், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளுதல், தினமும் சூரிய நமஸ்காரம் செய்தல், சந்தியாவந்தனம் செய்தல், காயத்திரி மந்திரம் மற்றும் ஆதித்யா ஹ்ருதயம் பாராயாணம் செய்தல், 1 அல்லது 12 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் அணிதல், மாணிக்க கல் பதித்த மோதிரம் உடலில் படும்படி அணிதல்,செந்தாமரை மலர்களால் சூரியனை அர்ச்சனை செய்தல் போன்றவை சூரிய தசை சூரிய புத்தி காலங்களில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகும்.

Leave a Comment

error: Content is protected !!