Homeசிவன் ஆலயங்கள்திருவண்ணாமலை கோவில் பற்றி சித்தர்கள் கூறும் ரகசியங்கள்!!

திருவண்ணாமலை கோவில் பற்றி சித்தர்கள் கூறும் ரகசியங்கள்!!

திருவண்ணாமலை

நமது கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று திருவண்ணாமலையில் கொலுவீற்றிருக்கும் அண்ணாமலையார் கோயிலை குறிப்பிடுகிறார் அகத்தியர். உண்ணும் உணவு சமைக்க அக்னி வேண்டும். உயிர் வாழ அக்னி மிக முக்கியம். நமக்கு வெளிச்சமே அக்னியில் இருந்து தான் கிடைக்கிறது. அந்த அக்னியே இறையாக அமர்ந்து அருள் பாலிக்கும் தளம் திருவண்ணாமலை.

இங்குள்ள மலை பெரிய ரகசியங்களை உட்கொண்டது. இன்றும் அத்ரி, ஜமதக்னி, வசிஸ்டர் உள்ளிட்ட ரிஷிகளும், குதம்பைச் சித்தர், போகர், திருமூலர் போன்ற சித்தர்களும் மலையின் உட்புறத்தில் தவம் செய்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பௌர்ணமி நாளில் அஸ்தமனத்திற்கு பிறகு மலையை வலம் வந்து உண்ணாமுலை அம்மன், சமேதரான அண்ணாமலையாரை தொழுகின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஜோதி திருநாளில் தேவலோகத்திலிருந்து இந்திரன், வாயு, வருணன், பிரம்மன் போன்ற தேவர்களும் இந்த மலைக்கு வந்திறங்கி தீபம் ஏற்றி அண்ணாமலையாரை வழிபாடு செய்கிறார்கள். பௌர்ணமி அன்று திருவண்ணாமலையை மாலை நேரத்தில் நாம் வலம் வரும்போது பற்பல தேவர்களின் அருளாசி நமக்கு கிட்டுகிறது  என்பது நாமே அறியா இயலாத உண்மை. இந்த அருளாசி நம் கல்வி மற்றும் செல்வத்தை மேலும் வளப்படுத்துவதோடு, நம்மை வருத்திக் கொண்டிருக்கும் எந்த விதமான துக்கத்தையும் விலக்கிவிடும் என்கின்றனர் நாடி ஓலைகள்.

திருவண்ணாமலை

“வருணனோடு இந்திரனும் பிரம்மனும் கிரியை வலஞ்செயக் கண்டேன் சிவனே!

துயருற்ற மாந்தர் – எகாந்தமாய் இறை சிந்தை கொண்டே சலத்தை  வலஞ்செய

தேவர் தம்மாசி கூடுதலால் கூடா மணங்கூடும் , சேராத் திரவியஞ் சேரும்

பிணி வேரோடு நீங்கும், கல்வியுங் கிட்டும், ஞானப்பெருக்குண்டாம், அல்லலும் போமாம்

கீர்த்தி பங்கமகலவே வியாஜ்ஜியமு மகலுமே ஜெயத்தோடே”

-என்கிறார் வியாச முனி

இவர் இவ்வாறு திருவண்ணாமலையின் புகழ் பாட ‘அண்ணாமலை அடைந்தக்கால் அனைத்தும் சித்திக்குமே உண்ணாமுலையாரை கை தொழுதக்கால் உன் எண்ணமெல்லாம் ஈடேறும் பொய்யொன்றுமில்லை சத்தியஞ் சொன்னோம்” என்று தம் அனுபவத்தை வெளிப்படுத்துகிறார் அகத்தியர். 

போகர் என்ன சொல்கிறார்? 

“நிலவிருக்க யவ்வோளியிலே அம்மலை யண்ணாமலையைச் சுற்றி ‘சிவ நம’ எனச் சாற்ற வியாஜ்ஜியத்தில்(நீதிமன்ற வழக்குகளில்)  வெற்றியாம், செல்வத்து சிறப்பாம், மேனிப்பிணியாற்றுப் போம் தமனும்  உமை வணங்க சாதிப்பதெல்லாம் எளிதே” என்கிறார். 

 திருவண்ணாமலையில் என்னவெல்லாம் உண்டு? 

இதற்கு திருமூலர் பதில் சொல்கிறார் “அங்கு கற்பக விருட்சமுண்டு, சஞ்சீவி பருவதமுண்டு. காமதேனும் வந்தே வணங்கிட கண்டேனே, அண்ணாமலை  என்னே கயிலாயமே” என்று உள்ளம் உருகி பாடுகிறார்.

ஆக திருவண்ணாமலை கோயிலை பௌர்ணமி நிலவொளியில் கிரிவலம் வருவது பெரும் பேரளிக்ககூடியது. ” முப்பானாறு முறை வருவோருக்கு முக்தியும் கூடுமே” என்பது சித்தர் காகபுஜண்டரின் வாக்கு. அதாவது 36 பௌர்ணமி நாட்களில் தொடர்ந்து கிரிவலம் மேற்கொண்டால் வழக்குகள் எல்லாம் சாதகமாக தீர்ப்பு பெறும், திருமண தடை நீங்கும், எதிர்பார்த்ததை விட சிறப்பாக வாழ்க்கைத்தரம் அமையும், 

திருவண்ணாமலை

ஆதிசங்கரரின் அவதாரம் இறையருளால் நிகழ்ந்தது. சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியர் தமக்கு பிள்ளை வரம் வேண்டி கேரளம் திருச்சூரில் உள்ள வடக்கு நாதர் என்ற சிவாலயத்தில் தங்கி இருந்தனர். இரவு நேரத்தில் அந்த வடக்கு நாதருக்கு அர்த்த ராத்திரி பூஜை செய்ய விஷ்ணு பகவானும், பிரம்மனும் வந்தனர். 

அவர்கள் பிள்ளை வரம் வேண்டி அங்கேயே தங்கி உறங்கிக் கொண்டிருந்த தம்பதியரை பார்த்து ஆசி அளித்தனர். அவர்களுக்கு இறைவன் அருளால் சிவ அம்சம் நிறைந்த மகன் பிறந்து, பின்னாளில் ஆதிசங்கரர் என்று பாரே போற்றும் வண்ணம் திகழ்ந்தார்.இதன் மூலம் ஒரு கோயிலுக்கு சென்று அந்த இறைவனிடம் நாம் வேண்டுகோளை முன்வைக்கும் போது அதே கோயிலுக்கு வரக்கூடிய பிற தேவர்களும் அந்த இறைவனுடன் சேர்ந்து வரம் அளிப்பார்கள் என்பது தெளிவாகிறது. 

கோயிலில் சென்று தங்குவதையும், மனமெல்லாம் அந்த கோயிலில் இறைவனை ஜபித்திருப்பதையும் எந்த நேரத்தில் செய்தால் முழு பலன் கிட்டும் என்பதையும் சித்தர்கள் குறிப்பாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஓர் உதாரணமாக அகத்தியர் திருவண்ணாமலையாரை எப்போது தரிசித்தால் நற்பல நிரம்ப பெறலாம் என்று சொல்லி இருப்பதை காணலாம்..

“அண்ணாமலையாரைத்  தொழத் தேவரும் வர கண்டேன் சிவனே- அயனும் மையானும் (மை போன்ற கரிய வண்ணம் கொண்ட விஷ்ணு) இந்திரனும், மந்த பிரதோஷ( சனி பிரதோஷ)  காலத்து வருதல் தப்பாதே- அந்த நாளில் அண்ணாமலையாரை வேண்டித் தொழ  எண்ணிய கருமமது சித்திக்கும் திண்ணமே” என்கிறார் அவர். 33 சனி பிரதோஷ நாட்களில் அண்ணாமலையாரை தொழுதால் முடியாதது என்று இப்பூமியில் எதுவுமே இல்லை என்கிறது சித்தர் நாடி.. 

இது மட்டுமல்ல காமதேனுக் கடவுளும், கற்பக விருட்சமும், ஞானசம்பந்தன் உள்ளிட்ட நாயன்மார்களும் பௌர்ணமி திதியிலும்,கார்த்திகை தீப திருநாளிலும் அருள்மிகு அண்ணாமலையாரை தொழுகின்றனர் என்றும் கூடுதலாக விவரிக்கிறார் அகத்தியர். 

“பசுத் தேவியுமெண்ணியதை யீயுந்தருவுமின்ன பிற ஞானியரும் போகியருஞ் சம்பந்தனுள்ளிட்ட நாயனாரும் தொழுந் தருணமாம்  கார்த்திகையான முழுமதி தனி லண்ணாமலையாரை கை தொழு தக்கால் எண்ணியதெல்லாம் சேரும். திண்ணமாய் மொழிந்த மொழி பற்றி யுய்வீரே”என்கிறார் குடமுனி. 

இப்படி சித்தர்கள் போற்றும்  திருவண்ணாமலையாரை மனதில் ஏற்று, அவர் ஆலயம் தொழுது, கிரிவலம் மேற்கொண்டு,எண்ணியதெல்லாம் ஈடேற பெறுவோம்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!