Homeஆன்மிக தகவல்விஜயதசமி வரலாறு மற்றும் விஜயதசமியின் சிறப்பு ?விஜயதசமி அன்று என்னென்ன தொடங்கலாம் ?

விஜயதசமி வரலாறு மற்றும் விஜயதசமியின் சிறப்பு ?விஜயதசமி அன்று என்னென்ன தொடங்கலாம் ?

விஜயதசமி வரலாறு

சரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாளை அனைவரும் விஜயதசமி நாளாக கொண்டாடுகிறோம். விஜயதசமி என்றால் வெற்றியை தருகிற நாள் என்று அர்த்தம்.

நவராத்திரி வழிபாட்டின் இறுதி நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. துர்க்கை ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு 10ஆம் நாளில் அவனை வெற்றிகொண்டாள். அந்த வெற்றியை குறிக்கும் தினமே விஜயதசமி ஆகும்.

புராணக்கதை:

பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் மகிஷன் என்னும் அசுரன். அவனது தவத்தைக் கண்டு மனம் இறங்கிய பிரம்மதேவர், அசுரனின் முன்பு தோன்றினார். அவரைக் கண்டதும் மகிஷன் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான், பின்னர் தனக்கு மரணமில்லாத வரத்தை தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டான். ஆனால், பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம் எனவே, வேறு வரம் கேட்கும்படி பிரம்மதேவர் கூறினார்.

இதையடுத்து, தனக்கு அழிவு என்று ஒன்று வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும் என்ற வரத்தை மகிஷன் கேட்டான். பிரம்மதேவரும் அவன் கேட்டபடியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் ஆபத்து வர வாய்ப்பில்லை என்று எண்ணினான் மகிஷன்,

தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான். மகிஷனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டனர்.

தேவியும் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க போர் செய்ய முற்பட்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தை அன்னைக்கு கொடுத்தனர் அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.

அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10ஆம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள். கொடியவனான மகிஷாசுரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றாள் அன்னை, அந்த வெற்றி திருநாளையே விஜயதசமியாக கொண்டாடுகிறோம். அசுரனை வென்று அனைவருக்கும் நன்மையை அளித்த அன்னையை போற்றி வழிபட்டால் தீமைகள் ஏதும் நெருங்காது.

விஜயதசமி சிறப்பு :

வெற்றியை தரும் நாளாக விஜயதசமி திகழ்கிறது. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் அவற்றை தொடங்குவது நன்மை தரும் மேலும், எந்தவொரு சுப விஷயங்களையும் விஜயதசமி நாளில் தொடங்கினால் எளிதில் வெற்றி பெறலாம்.

விஜயதசமியன்று என்னென்ன தொடங்கலாம்?

நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு வரும் பத்தாவது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்று தொடங்கப்படும் எந்தவொரு காரியமும் வெற்றியளிக்கும் என்பது நம்பிக்கை.

வித்யாரம்பம் :

ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை கல்வி கற்க துவங்கும் நாளை மிகவும் புனிதமாக கருதுவது இயல்பே. அந்த விசேஷமான தருணத்தை கொண்டாடும் நாள் தான் விஜயதசமி.

விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய கலைகளான பாட்டு, இசைக்கருவி இசைத்தல், நடனம், ஓவியம் போன்ற கலைகளை கற்க பள்ளிகளில் சேரப்பார்கள். ஏற்கனவே இக்கலையை கற்று கொண்டிருக்கும் மாணவர்களும் தங்கள் குருவிற்கு சிறப்பு தட்சணை அளித்து சிறிது நேரமாவது இந்த நல்ல நாளில் அக்கலையை பயிலுவார்கள்.

விஜயதசமி நாளில் 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு விஜயதசமியன்று வித்யாரம்பம் செய்யப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை கோவிலகளிலோ அல்லது வீட்டிலோ செய்யலாம் கோவில்களில் செய்யும் போது நல்ல நேரம் பற்றி யோசிக்க வேண்டாம் வீட்டில் செய்யும் போது நல்ல நேரம் பார்த்து இதை செய்ய வேண்டும். குருவின் பங்கு இதில் மிகவும் முக்கியம்.

குழந்தையை வீட்டில் அப்பா தாத்தா அல்லது தாய்மாமாவின் மடியில் உட்கார வைத்து கொள்ள வேண்டும். ஒரு தட்டில் அரிசியை முழுவதுமாக தூவி வைக்க வேண்டும் குரு குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை எழுத வைப்பார்.

குழந்தை தடையின்றி எழுதவும், பேசவும் இந்த சுபநிகழ்ச்சி மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

விஜயதசமியன்று என்னென்ன தொடங்கலாம்?

வித்யாரம்பம் செய்தல்

புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல்

புதிய தொழில் ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல்

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது

நடனம், சங்கீதம் போன்ற கலைகளை கற்க ஆரம்பித்தல்

இதுபோன்ற செயல்களை விஜயதசமி அன்று ஆரம்பித்தால் வெற்றியும், புகழும் கிடைக்கும்.

முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தகங்கள், இசைக்கருவிகள் மற்றும் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளை விஜயதசமி பூஜை முடிந்து உபயோகம் செய்வது சிறப்பு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!